Friday 15 August 2014

மாதவிலக்கின்போது வரும் வலியைத் தணிக்க ஒரு எளிய மருத்துவம்!!!

                             கமலாவுக்கு தனது மாத விலக்கு நாள்  நெருங்கிவிட்டதை நினைத்தாலே, உடல் நடுங்கத் தொடங்கிவிடும்.பெண்ணாய் பிறந்த பாவத்தினால்தான்,  இப்படியொரு  நரக வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளதாக நினைத்து கண்ணீர் சொரிவாள்.
                                                         எங்கள்   சொர்ணம் பாட்டியைத் தெரியாதவர்கள்  யாரும் இருக்க முடியாது. அவளது சமயோசித புத்திசாலித்தனம் அவ்வளவு பிரசித்தம்.  நாங்கள் பிரச்சினைகளில் சிக்கி, விடை கிடைக்காமல் திணறுகிற நேரங்களிலெல்லாம் அபயக்கரம் நீட்டி அருள்பாலிப்பாள். அத்தகைய ஆல் இன் ஆல் அறிவுப் பாட்டிதான் எங்கள் சொர்ணம் பாட்டி.
                                                               கமலாவின் பிரச்சினைக்கு  எங்கும் தீர்வு கிடைக்காத காரணத்தினால், எல்லோரையும் போலவே கமலாவும், சொர்ணம் பாட்டியைத் தேடிப் போனாள். தனது பிரச்சினை விளக்கத் தொடங்கினாள்.
                                             “பாட்டி, மாத விலக்கு வருவதற்கு மூணு நாளு இருக்கும் போதே எனக்கு வாந்தி, மயக்கம், கடுமையான வயிற்று வலி தொடங்கி விடும். புரண்டு புரண்டு அழறத தவிர எனக்கு வேற வழியே இல்ல. அதிலிருந்து அஞ்சு நாட்களுக்கு நரகம் தான் எனது வீடாக இருக்கும். கருட புராணத்தின் அத்தனை சித்திரவதைத் தண்டனைகளும் எனக்கு விதிக்கப்படும். செய்யாத வைத்தியம் இல்ல. தீர்வுதான் கிடைத்த பாடில்லை. நம்ம பெண் ஜென்மமே,  பாவப்பட்ட ஜென்மம்தான் பாட்டி” என தனது துயரத்தை வார்த்தைகளில் கொட்டினாள்.
                                                                     “அடி போடி, போக்கத்தவளே, எவடி சொன்னா, பெண் ஜென்மம் பாவப்பட்ட ஜென்மம்னு. ஆக்க சக்தியின் ஊற்றுக்கண்ணே பெண் தாண்டி. இதைத் தெளிவா புரிஞ்சுக்கோ. உன் பிரச்சினைக்கு தீர்வைத் தேடி ஊரெல்லாம் போனியே,  இந்த சொர்ணம் பாட்டிகிட்ட அப்பவே வர்றதுக்கென்ன...  சரி.. சரி.. போனது போகட்டும். இப்ப விஷயத்துக்கு வருவோம்.  இந்தப் பிரச்சினை உனக்கு மட்டுமல்ல, இப்ப எல்லா பொம்பிளைகளுக்கும் உள்ள பிரச்சினைதான். இதற்கு அருமையான, எளிமையான தீர்வு இருக்கிறது. அதை செய்து பாரு.. அதுக்கப்புறமா புரிஞ்சிப்ப.. பெண் ஜென்மம் பாவ ஜென்மமில்லன்னு...”
                                                      ” காலையில, வெறும் வயிற்றில,
 எட்டு மிளகையும் எட்டு டைமண்ட் கற்கண்டையும் சேர்த்திடித்து,
 இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, 
ஒரு டம்ளரா சுண்டியவுடன் இறக்கி, 
சூடு ஆறியவுடன் குடிச்சுடு. 
இப்படி மூணு நாளு செஞ்சு பாரு.  
அதுக்கப்பறமும்  உன் வயிற்று வலி இருந்திச்சின்னா, 
 இந்த சொர்ணத்தோட பேரையே மாத்திக்கறேன்.”