Friday 29 August 2014

தமிழ் மருந்துகள்!!!

தமிழ் மருந்துகள்

நல்லெண்ணெயில் காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்லும் முன்னும் வாய் கொப்புளிக்க வேண்டும். நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி வாயில் ஊற்றி 10 மணித்துளி கொப்புளித்துத் துப்பிவிட வேண்டும்; விழுங்கக் கூடாது; பின் வெந்நீரில் வாயைக் கழுவவேண்டும். இவாறு செய்வதால் வாய் நாற்றம், பல்வலி, பல்சொத்தை நீங்குவதுடன் வாய்வழியே குடலுக்கு – உடலுக்குச்- சேரும் நோய்க் கிருமிகள் தவிர்க்கப் பெறுவதால் பிற நோய்கள் பலவும் தாக்குவதில்லை.தலைவலி, மூக்கடைப்பு, இழுப்பு (ஆசுமா), நுரையீரல் கல்லீரல் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், குறிப்பாக வாதவலிகள் மூட்டு வலிகள் நீங்குகின்றன.



கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட இரைப்பை வலிமை பெறும்; விக்கல் வராது. தொடர்ந்து விக்கல் ஏற்பட்டால் தண்ணீர் குடிக்கவும்; சீனி வாயிலிட்டு மெல்ல விழுங்கவும். அப்படியும் நிற்கவில்லை என்றால் மயிலிறகைச் சுட்டு அச்சாம்பலைத் தேனில் குழைத்துத் தருக. திப்பிலி இரசாயனம் ஒரு சிட்டிகையைத் தேனில் குழைத்தும் தரலாம். எதற்கும் நிற்காத விக்கலை ஒல்லியலில் (ஓமியோபதியில்) மேக் பாஸ் 6 நிறுத்தும். இது தாதுப்பு (பயோ கெமிக்கல்) மருந்தாகும். வெந்நீரில் 10 மாத்திரை இட்டு, 5 மணித்துளிக்கு ஒரு முறை கொடுக்க உடனே நிற்கும்.


முருங்கை இலையைப் பிழிந்து ஒரு தேக்கரண்டிச் சாற்றைச் சூடுகாட்டிக் குழந்தைகளுக்குத் தரலாம். இரத்தத்தைப் பெருக்கி நலம் தரும்.
குப்பைமேனி மூன்று இலை, உப்புடன் கசக்கிச் சாற்றில் சில துளி கொடுக்கச் சளி நீங்கும். 
குழந்தைகளுக்கு காய்ந்த திராட்சையை இரவில் ஊறவைத்துக் காலையில்சாறு பிழிந்து தருவதால் மலச் சிக்கல் நீங்கும்.
குடலேற்றம் ஏற்பட்டுக் கதறி அழுதால், (வயிற்றுப் போக்கும் போகும்), குழந்தையைத் தூங்க வைக்கும் தூளியில் / ஏனையில்/ தூக்கில் அல்லது புடவையில் குழந்தையை இட்டு நன்கு உருட்டினால் போதும்.

கடுஞ்சளி, இருமல், மாலையில் சுரம், உடல் இளைப்பு இருந்தால் முற்காச (பிரைமரி காம்பிளக்சு) நோயாக இருக்கலாம். காதின் கீழ் (பின்பக்கம்) தொட்டுப் பார்த்தால் சிறு வீக்கமாகத் தெரியும். திப்பிலி சூரணம் ஒரு சிட்டிகை தேனில் குழைத்துத் தருக. வாச கண்டகாரி இளகியம் (இலேகியம்) காலை மாலை இருவேளை சுண்டைக்காய் அளவு தரலாம். ஒல்லியலில் (ஓமியோபதியில்) ஆர்சனிக் அயோடேட்டம் 6 மருந்தில் 4 மாத்திரை மூன்றுவேளை தொடர்ந்து முன்னேற்றம் காணும் வரை தர வேண்டும்.

தொண்டைச் சதை, உள்நாக்கு வீக்கம் ( டான்சில்), இருமல், அடிக்கடி சுரம் இருந்தால், ஒல்லியலில் (ஓமியோபதியில்) காலையில் பாரிடா கார்ப் 30 , இரவு ஆர்சனிக் அயோடேட்டம் 6 மருந்துகளை 4 மாத்திரை தொடர்ந்து முன்னேற்றம் காணும் வரை தர வேண்டும்.    



அறுசுவை மருத்துவம்:


காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு – நினைவாற்றலை அதிகப்படுத்தும்; எலும்புசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்; குருதி (இரத்த) அழுத்தம் (நோய்) அதிகமாகிவிடும்.
தயிர் புளிப்பு என்று கூறுவர்; ஆயின் கசப்புச் சுவையின்பாற்படும்; தயிர் சளி ஏற்படுத்தாது; அதனுடன் உப்பு சேர்ந்தால் மட்டுமே அவ்வளவு தயிரும் (சிலேட்டும வாகினர்க்கு) சளியாக மாறும். பாக்கு இரத்தம் மிகச் செய்யும்; அதிகம் சேர்த்தால் இரத்தம் முறியும். கசப்பு தோல் நோய்களைப் போக்கும்; ஆயினும் தோல் நோய் போக்கும் மருந்துகளைச் சாப்பிடுகையில் பாகல்காய் கூடாது. நால்தோறு சாப்பிடும் உணவில் நாம் கசப்பும் துவர்ப்பும் சேர்ப்பதே இல்லை. நாள்தோறும் அளவாகச் சேர்த்துப் பாருங்கள் -நோய்கள் அண்டாது.   

உணவே மருந்து


சோறு, குழம்பு, சாறு (ரசம்), தயிர் அல்லது மோர், ஊறுகாய், அப்பளம், பொரியல்,கூட்டு, தொகையல்,, தொக்கு என அமையும் இயல்பான தமிழர் உணவு முறையில், இவை ஒவ்வொன்றிலும் சேர்க்கப்பெறும் பொருள்கள் நோய் வராமல் தடுக்கும் - வந்தால் போக்கும் - மருத்துவக்குணம் உள்ளவை.
குழம்பில் சேர்க்கப்படும் புளி/ புளிப்பு செரிமான சக்தி தரும்; காய்கறி,பருப்பு ஆகியவற்றில் ஏதேனும் நச்சுப் பொருள், கிருமி இருப்பின் அகற்றும். மிளகாயில் உள்ள உறைப்பு பசி ஏற்படுத்தும்; கால்சியம் எலும்புகளுக்கு வலிமை தரும். துவரம்பருப்பு புரதச்சத்து மிகுந்தது. பருப்பால் ஏற்படும் வளி (வாயு) பெருங்காயத்தால் நீங்கும். பெருங்காயம் எலும்புகளுக்கு நோய் வராமல் தடுக்கும்.
புளிக்குழம்பு, காரக் குழம்பு, பருப்புக்குழம்பு, பருப்பு உருண்டைக்குழம்பு, கீரைக்குழம்பு, பொரிச்சக் குழம்பு, பூண்டுக்குழம்பு, மோர்க்குழம்பு எனப் பலவகைகள் உண்டு; ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் மருத்துவப் பயன் நல்கும்.சாப்பிட்ட்தும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லது. புகையிலை சேர்த்துப் போடுவதும் சுண்ணாம்பைக் கண்ட இடங்களில் தடவுவதும் துப்புவதும் செய்து இதை அருவெறுப்பாக்கிவிட்டனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அளவாகச் சேர்த்து கால் மணி நேரம் நன்றாக மென்று உமிழ்நீருடன் விழுங்க வேண்டும் ; துப்பக் கூடாது. பின்னர் நல்ல தண்ணீரில் வாயை நன்றாகக் கொப்புளித்துவிட வேண்டும்; அப்போதுதான் பற்களில் காறை படியாது.வெற்றிலை சளி போக்கும்; செரிமானம் தரும். சுண்ணாம்பு கால்சியம் சத்து தரும்; கொழுப்பு உணவுகளைச் செரிக்கச் செய்யும், எலும்பும் வலிமை பெறும், பல்லும் தூய்மையாகும். பாக்கு மெல்லுவதால் இரத்தம் அதிகரிக்கும்; கொழுப்பு கரைக்கப் படுவதால் இரத்தம் தடிமானாகாது, அதனால் இரத்த அழுத்தம் இதய அடைப்பு வருவதில்லை. “கீரை தயிர் இரண்டும் கேடு செய்யும் இரவில்” – பாவேந்தர் பாரதிதாசன். பகலில் நாள்தோறும் கீரை சேர்ப்பதால் பற்கள், எலும்புகள் வலிமை அடையும்; மலச்சிக்கல் வராது.

-------------------------------------------------------------