Tuesday 6 October 2015

Kitchen Tips!!!

உருளைக்கிழங்கை அரைவேக்காடாக வேகவைத்து நன்கு வடித்தெடுத்து பிறகு ரோஸ்ட் செய்தால் பாதி அளவு எண்ணெய் கூட செலவாகாது. மிகவும் ருசியாகவும் இருக்கும். • கட்லெட் செய்யும் போது உருளைக்கிழங்குக்குப் பதிலாக சேனைக் கிழங்கு அல்லது பிடிக்கருணைக் கிழங்கு வேகவைத்துப் பிசைந்து செய்யலாம். கட்லெட் மிகவும் சுவையாக இருக்கும். • அடுப்பு மேடையில் எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் இடங்களில் கடலைமாவு அல்லது கோதுமை மாவைத்தூவி வைத்திருக்கவும். 15 நிமிடங்கள் கழித்து, ஒரு பழைய துணியால் அழுத்தித் துடைத்துவிட்டு, சோப்புத் தண்ணீர் கொண்டு அலம்பினால் அடுப்பு மேடை எண்ணெய்ப் பிசுக்கு நீங்கி பளிச்சென ஆகிவிடும். • ஃப்ளாஸ்க்கில் பால், காபி, டீ என எதை ஊற்றி வைத்தாலும், சர்க்கரை கலக்காமல் ஊற்றி வைப்பதுதான் நல்லது. சர்க்கரை சேர்க்காததால் பலமணி நேரங்கள் ஆனாலும் பானங்கள் கெடாமல் இருக்கும். • பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும். • பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாகத் தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது. • இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும். • வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு பிறகு எண்ணெய்யில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும். • சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கப் புழங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும்போது சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. • வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் ஒரு ஸ்லைஸ் அல்லது இரண்டு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும். • ஒரு கரண்டி கோதுமைமாவை நெய்யில் வாசனை வரும் வரை நன்கு வறுத்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு காய்ச்சின பால், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்க்க சுவையான, மணமான கோதுமை பாயசம் ரெடி. • திரட்டுப்பால் செய்யும்போது மெல்லிய எவர்சில்வர் தட்டை அதனுள் போட்டல் பால் பொங்காமலும் அடிப்பிடிக்காமலும் கிளற வரும். • ஒவ்வொரு முறையும் தோசை ஊற்றுவதற்கு முன்பாக, தோசைக் கல்லில் தண்ணீர் தெளித்து, துடைத்துவிட்டு ஊற்றினால் தோசை கருகாது. • எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும்போது சிறிது பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும். • வெண்டைக்காயை வதக்கும் போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறு மொறுவென இருக்கும். • வத்தக் குழம்பு செய்யும்போது கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். • கீரையைப் பருப்புடன் சேர்த்து செய்யும்போது தக்காளி, புளி சேர்க்காமல் நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும். • துவரம் பருப்பு வேக வைக்கும்போது பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும். உடம்புக்கும் நல்லது. Like

No comments: