Monday 16 November 2015

சூப்பர் குறிப்புகள்

சூப்பர் சமையல் குறிப்புகள்!!! ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊற வைத்து, அடை மாவுடன் சேர்த்து வார்த்தால், வித்தியாசமான ருசியோடு, மொறுமொறுப்பாகவும் இருக்கும். மாவைப் பிசைந்து, நீண்ட நேரம் கழித்து பூரி பொரித்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சும். பிசைந்த சிறிது நேரத்திலேயே பொரித்தால் எண்ணெய் மிச்சமாகும். புட்டு செய்ய மாவு பிசையும்போது, சிறிது பீட்ரூட் அல்லது கேரட் துருவிச் சேர்த்தால் சுவை கூடும். உடம்புக்கும் நல்லது. இட்லி மாவு புளித்து விட்டதா... குறைவாக இருக்கிறதா? இரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து மிக்ஸியில் மசிக்கவும். அதை இட்லி மாவில் கலந்து மிதமான தீயில் தோசையாக வார்க்கவும். பேப்பர் ரோஸ்ட் போலவே பிரமாதமாக இருக்கும். டிபன் செய்ய அவசரத்துக்கு ஒன்றும் இல்லையா? கஞ்சி மாவில் (ராகி, பொட்டுக்கடலை, கோதுமை, புழுங்கல் அரிசி, ஜவ்வரிசி அனைத்தும் வறுத்து அரைத்தது) சிறிது அரிசி மாவைக் கலக்கவும். அதில் தேவையான வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போடவும். கடுகு, சீரகம் தாளித்து தோசை வார்க்கவும். பட்டுப் போல இருக்கும் தோசை! குருமா செய்யும்போது, தேங்காயு டன் ஒரு கரண்டி பொரி அரிசி, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் புதுச்சுவை கிடைக்கும். ஒரு டீஸ்பூன் நெய்யை சூடுபடுத்தி, அதில் கைப்பிடி முருங்கை இலை போட்டு வறுக்கவும். மொறுமொறுப்பானவுடன் அதைக் கையால் நொறுக்கி, தோசை மாவில் கலக்கவும். தோசையாக வார்க்கவும். குட்டீஸுக்கு பிடிக்கும் இந்தச் சுவை! இட்லி மிளகாய்ப்பொடியுடன் சிறிது வெங்காயம் வெட்டிப் போட்டு அரைத்தெடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி தயார்! தேங்காய் சட்னிக்கு அரைக்கும்போது, பச்சை மிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்த்து அரைக்கவும். சிறிதளவு இஞ்சி, அரை டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அரைக்கவும். சுவை கூடும். பாதி வெங்காயத்தை எண்ணெயில் தோய்த்து, அதை தோசைக்கல்லில் தேய்த்த பின் தோசை வார்த்தால் விண்டு விடாமல் இருக்கும். வெங்காய மணம் கமகமக்கும். கொழுக்கட்டைக்கு மாவு பிசையும்போது, நீருடன் சரி பாதி பால் ஊற்றினால் சுவையாக இருக்கும். கொழுக்கட்டை பார்ப்பதற்கு வெண்மையாகவும் இருக்கும். சப்பாத்தி மாவு பிசையும் போது, கால் டம்ளர் பால் விட்டுப் பிசையவும். ஒரு துளி கூட எண்ணெய் விடாமலே ‘புஸ்’ என்று மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். நல்லெண்ணெய் கலந்து ஊற்றி தோசை வார்த்தால் கல்லில் ஒட்டாது. கொஞ்சமாக எண்ணெய் ஊற்றினாலும் நிறைய ஊற்றியது மாதிரி இருக்கும். உளுந்து வடை மாவு நெகிழ்ந்து விட்டால், அரிசி மாவு சேர்க்க வேண்டாம். ஒரு பிடி மெது அவலை கலந்து தட்டவும். தட்டுவதற்கு லகுவாகவும் மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும். பூரி மசாலா செய்யப் போகிறீர்களா? வெந்த உருளைக்கிழங்கை மாவாக்கிச் சேர்க்கும் போது, பொட்டுக்கடலை மாவு அல்லது கடலை மாவைக் கரைத்து ஊற்றினால் மசாலாவுடன் சேர்ந்து சுவையாக இருக்கும்.

No comments: