Saturday 21 December 2013

இருமலுக்கு கை கண்ட மருந்து சிற்றரத்தை!!!

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம். 

சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.