Wednesday 6 April 2016

Firstaid-Tamil Medicine!!!

கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்துப் பார்க்கலாமா?
ஆடாதொடை - எந்த உரமும் போடாமல், எந்தப் பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்தச் செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்தச் செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்துக் கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வரத் தயங்கும், நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியைக் கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
அதிமதுரம் - இனிப்புச் சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும். திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலிக் கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செரியாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்துக் கசாயமாக்கிச் சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10 மி.லி. அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
சீரகம் - லேசான கிறுகிறுப்பு அதிகப் பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளைக் கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிடக் குறையும்.
வாய்விடங்கம் - வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு, மிளகு சேர்த்துக் கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு, மதிய வேளையில் மோரில் பெருங்காயத் தூள் போட்டு சாப்பிடத் தீரும்.
கடுக்காய் - விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்து வரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு, வெந்தயம், பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாகக் கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1 ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!
சாதிக்காய் - தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய்த் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட, தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்தப் பட்டையை தேநீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
இந்தப் பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்த்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்தக் கிச்சனில் இந்தப் பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருடத்திற்கு முன் ’ஓட்ஸ்’ என்றால் எத்தனை பேருக்குத் தெரிந்தது? ஆனால் தினையோ கம்போ பற்றிப் பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?” என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.
அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களைக் கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்!
- See more at: http://mazhalaigal.com/
education/health/201411mgl_herbal-first-aid.php#sthash.r2YzAhJb.dpuf
Read more at http://mazhalaigal.com/
education/health/201411mgl_herbal-first-aid.php#edJvWiRsGvYTxKUO.99.

No comments: