Tuesday 16 June 2015

பத்திய சமையல்!!!

பத்திய சமையல்!
‘‘மழை, குளிர் காலங்களில் சளி, இருமல், ஜலதோஷத்தால் பலரும் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால், அஜீரணக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவற்றை வீட்டிலிருக்கும் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்’’ என்று கூறும் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி, இந்த இதழில் மிளகுக் கஷாயம், இஞ்சிப் பச்சடி தயாரிக்கும் முறைகளைக் கூறுகிறார்.
மிளகுக் கஷாயம்
தேவையானவை:
மிளகு, சீரகம், தனியா (மல்லி) - தலா கால் கப்
ஓமம் - 2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய சுக்கு, நசுக்கிய சித்தரத்தை - தலா 3 டேபிள்ஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா(மல்லி), ஓமம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வறுத்து,
4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, அது இரண்டு டம்ளராக சுண்டியதும் இறக்கவும். இதனை வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம். வடிகட்டியவற்றை தனியே எடுத்து வைத்து, அன்று மாலையே மீண்டும் 3 டம்ளர் நீர் விட்டு, அது ஒன்றரை டம்ளராக சுண்டியதும் இறக்கி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
தீர்வு:
சித்தரத்தை, சளியை அறுத்து வெளியே கொண்டுவந்துவிடும். பனங்கற்கண்டு, இருமல் போக்கும். மிளகு, சீரகம், தனியா, ஓமம், பித்தத்தை அகற்றி, செரியாமையை நீக்கும்.
இஞ்சிப் பச்சடி
தேவையானவை:
நடுத்தரமான இஞ்சி (பிஞ்சாகவும் இல்லாமல், முற்றலாகவும் இல்லாமல் நடுத்தரமாக வாங்கவும்) - 250 கிராம்
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - கொட்டைப்பாக்கு அளவு
காய்ந்த மிளகாய் - 3
கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியைத் தோல் நீக்கி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைக்கவும். வெறும் வாணலியில் கடுகு, பெருங்காயம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து (தேவைப்பட்டால் சில துளிகள் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம்), நறுக்கிய இஞ்சி, வறுத்த பொருட்கள், வெல்லம், உப்பு, மிளகாய், புளி சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, அரைத்து, விழுதை வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதை 3, 4 தினங்கள் உபயோகிக்கலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்துச் சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
தீர்வு:
நல்ல செரிமானம் ஏற்படும். வாயுத்தொல்லை தீங்கும். சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.